Saturday, June 28, 2008

குங்குமம் நேர்காணல்


எப்போதோ வந்த செவ்வி, கூடுதல் விபரங்கள் இல்லை. தொகுப்பில் இருந்ததை எடுத்து வெளியிட்டுள்ளேன்.

Wednesday, June 18, 2008

வாழும் பெரியார்

பார்ப்பனராய் அல்லாதார் நாமென்னும் நல்லுணர்வைப்
படிக்கின்ற பருவத்தே ஆசானாம் கணபதியும்
போர்க்குணமே மிக்கவராம் வே.ஆனைமுத்துவிற்குப்
புரிகின்ற படிநன்கு புகட்டிவிட்டார்; "பாலதனை
வார்க்கின்ற வர்காலைப் பதம்பார்த்து வருணமெனும்
வஞ்சகத்துப் புற்றினிலே வாழ்ந்துவரும் பாம்புகளே
பார்ப்பனர்கள்" என்பதனைப் பாருக்கு உணர்த்திட்டார்
பகுத்தறிவுப் பகலவனாம் பார்போற்றும் நம்பெரியார்!

எடுத்ததொரு கொள்கையினில் எந்நாளும் பிடிப்போடு
இருப்பதெனும் உறுதியுடன் இருப்பவராம் ஆனைமுத்து
அடுத்ததொரு முடிவெடுத்தார் அருந்தலைவர் பெரியாரின்
அனல்பறக்கும் கழகத்தில் அவர்தன்னை இணைத்திட்டார்!
அடுத்திருந்து பெரியாரின் அறிவுரையை அவர்பேச்சை
அவரெழுத்தை அணுஅணுவாய் உள்வாங்கி உரம்பெற்றார்
கெடுக்கின்ற அரசியலின் கொடுஞ்சட்டந் தன்னைக்கொளுத்திக்,
கொடுத்ததொரு பரிசாகச் சிறைவாழ்வும் அவர்ஏற்றார்!

எப்போதும் களம் நிற்கும் வீரருக்குப் பின்னாலே
தப்பாமல் அவர்துணைவி நின்றிடுவார் பெரும்பாலும்
ஒப்பாக இவருக்கும் வாய்த்தனளோர் நற்றுணைவி
செப்பிடலாம் அம்மையினை மார்க்சுக்கு ஜென்னியென
தப்பின்றி எழுவர்க்குச் சுசீலாவும் தாயானார்
தடையின்றித் தம்கணவர் கொள்கைக்குத் துணையானார்
முப்பொழுதும் அப்பொழுதும் இப்பொழுதும் அவருக்கு
முதன்மனைவி அவர்கொள்கை; அடுத்ததுதான் தானானார்!

யானையதைப் பார்த்ததொரு குருடரைப்போல் பலரிங்கு
பெரியாரைப் பார்க்கின்றார் பலவாறு பகர்கின்றார்
ஆனைமுத்து ஒருவர்தான் அவர்நெறியை அவர்கருத்தைச்
சரியாகச் சொல்கின்றார் சரியாகச் செய்கின்றார்!
தேன்மட்டும் உறிஞ்சுதற்குத் தெரியாத வண்டனையோர்
தேவையின்றி மலரின்மேல் தினந்தினமோர் பழிதெளிப்பார்
வான்முட்டும் அளவிற்கு வழங்கிவைத்த கருத்தெல்லாம்
"ஈ.வெ.இரா. சிந்தனையாய்" அவரன்றோ தொகுத்தளித்தார்!

நாடெங்கும் மக்களுக்குக் கல்வியினில் வேலைதனில்
நல்லதொரு இடம் கிடைக்க நாளெல்லாம் பாடுபட்டார்
ஓடிவட நாடெல்லாம் ஒதுக்கீட்டுத் தோச்சுடரை
ஓயாமல் ஏற்றிட்டார் ஓய்வின்றித் தானுழைத்தார்
வாடிவிடா மல்பெரியார் கொள்கைகளைக் காப்பதற்கு
வளமான "சிந்தனையாளன்" ஏடு நடத்துகிறார்
நாடியவர் கருத்தறிந்து நாமெல்லாம் தோள்கொடுத்தால்
தேடிவரும் தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சியன்றோ!

பெரியாரின் பெயர்சொல்லிப் பிழைக்கின்றார் பலரிங்கு
பெரியாரின் பெயர்சொல்லிப் பிழைக்கின்றார் திராவிடத்தார்
பெரியாரின் பெயர்சொல்வார் பொதுவுடைமைத் தோழருமே
பெரியாரின் பெயர்சொல்லிப் பேசாதார் எவருமில்லை
பெரியாரை விலைபேசி விற்காதார் எவருமில்லை
பெரியாரியல் வெற்றிக்கு எவரிங்குத் தோள்கொடுப்பார்?
ஆனைமுத்து! அவரேதான் வாழுகின்ற நம் பெரியார்!
---பாவலர் வையவன்
(நன்றி சிந்தனையாளன் பொங்கல் சிறப்பு மலர் -2006)

ஆனைமுத்து நூல் நிதி ஏன்?

தோழர்களே!
ஆனைமுத்து ஜூன் 21இல் 81-அய்த் தாண்டுகிறார். 60 ஆண்டுகள் - தமிழ் - தமிழன் - தமிழ்நாடு சிக்கல்களுக்கு தீர்வு காண உழைத்திருக்கிறார். களப்பணி - பிரச்சாரம் - எழுதிக் குவித்தது - எல்லாம் காற்றில் கலந்த பேரோசையாக! இவர் எழுத்தில் நூலானது - 1980இல் - ஒரு சிறு பகுதி மட்டுமே!பெரியாருக்கும் ஆலோசகர்: பலருக்குத் தெரியாது - தோழர் ஆனைமுத்து பெரியாருக்கும் ஆலோசகர் என்பது. இலக்கிய - சட்ட - வரலாற்றுச் செய்திகளில் நாள் தேதி இடம் - உட்பட நினைவில் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் இவர். புத்தமதத்துக்குப் போனாலும் - நாத்திகன் ஆனாலும் - இந்து இல்லை என்று எழுதிக் கொடுத்தாலும் நீங்கள் இந்துதான் - என்ற செய்தியை ஆதாரங்களுடன் - நீதிமன்ற தீர்ப்பு சான்றுகளுடன் பெரியார் முன் வைத்தார் ஆனைமுத்து. "தப்பு பண்ணிட்டேன்” என்று பெரியார் தலையில் அடித்துக் கொண்டார். அதுமுதல் ஆனைமுத்தை முதன்மை பிரச்சாரகர் ஆக்கினார், பெரியார்.இலக்கியச் சுரங்கம்: தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் - ஆனைமுத்து. எந்த இலக்கியத்தில் - எந்தச்சொல் - எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்தவர். திருக்குறளில் பெரிய ஆராய்ச்சியே செய்து - அது ஒரு நீதி நூல் மட்டுமே - மனுநீதியிலும், அர்த்த சாஸ்திரத்திலும் இருக்கும் ஈவிரக்கமற்ற அரசக் கொடுங்கோன்மைக் கருத்துக்கள் - திருக்குறளில் இல்லை என்றவர் ஆனைமுத்து. மனு - கவுடில்யர்படி ஆண்டவர் வென்றார்கள். திருக்குறள்படி வாழ்ந்தவர்கள் - வீழ்ந்தார்கள். ஆட்சிக்கு வன்முறை அவசியம். இராணுவம் அவசியம். புத்தமத வீழ்ச்சிக்கு முதல் காரணம் - அசோகன் ராணுவத்தைக் கலைத்ததுதான் - என்பன போன்ற ஆனைமுத்து கருத்துகள் "அட்சரம் லட்சம்” பெறும்!குடும்ப நிலைமை / பொருளியல்: மக்களுக்காகப் பாடுபடும் - தோழர் ஆனைமுத்துவின் பொருளியல் நிலை என்ன? குடும்ப நிலை என்ன? எங்கேயும் யாரிடமும் இவர் பேசாத செய்திகள் இவை. இருந்த 8 ஏக்கர் நிலத்தை - வந்த அந்நாள் (1950) ரூ.8000-10,000 பணத்தை - இயக்கம் வளர்த்ததிலும் பத்திரிகை நடத்தியதிலும் "பாழ் பண்ணியவர்” ஆனைமுத்து. ஒருபிடி நிலக்கடலையும் - இரண்டு பேரீச்சம்பழமும் இரவு உணவாகச் சாப்பிட்டு புத்தகம் - கட்சி அறிக்கை கட்டுகள் - இந்தக் கையில் 20 கிலோ - அந்தக் கையில் 20 கிலோவுடன் டெல்லி - மும்பை ரயில் மேம்பாலங்களில் இவர் ஏறும் காட்சி - துயரத்திலும் துயரம். அது அல்ல நம் கவலை! ஆனைமுத்துவின் சிந்தனை - எழுத்து - தன் வரலாறு - நூலாகாதது! பல ஆண்டுகளாக இவர் எழுதும் சிந்தனையாளன் Periyar Era - தலையங்கம் அனைத்தும் நூலாகத் தகுந்த - தமிழ்மக்கள் மேம்பாட்டு மாமருந்து. நூலாகவில்லை. அது நமக்கு இழப்பில்லையா? அதுவே நம் கவலை!பெரியார் தமிழ்ப் பேரவை: எத்தனையோ பேரறிஞர்களின் சிந்தனைகள் - எழுத்துக்கள் - காற்றில் கலந்து மண்ணோடு மண்ணாகின - தமிழனின் பொறுப்பற்ற புறக்கணிப்பால்! ஆக்ஸ்போர்ட் படிப்பாளி - கம்யூனிசத் தந்தை - KTK தங்கமணியின் சிந்தனைகள் - தன் வரலாறு நூலானதா? தமிழை - புது பீடத்தில் ஏற்றிய பாவாணருக்குத் தன்வரலாறு இருக்கிறதா? சுர்ஜித் - நல்லகண்ணு - வரதராசன் என்று கம்யூனிசக் கனவில் தம் வாழ்வை அழித்த பேரறிஞர் - யாருக்கும் அவர் தம் சிந்தனைகள் நூலாக நாம் வழி செய்யவில்லையே! அதனால் பெரியார் தமிழ்ப் பேரவை களமிறங்கியிருக்கிறது - மக்களிடம் பணம் திரட்டி அறிஞர்களின் சிந்தனைகளை நூலாக்க! இதில் முதல் முயற்சி - உடன் இருப்பு - அருகாமை கருதி தோழர் ஆனைமுத்துவுக்கு. இந்த எம்பணி - எம் தொடர் திட்டத்தில் முதல்படி தான்!கொடுங்கள் - கொடுங்கள் தோழர்களே! அள்ளிக் கொடுங்கள் - கொட்டிக் கொடுங்கள், ஒரு லட்சம் என்பது - இரண்டு லட்சமானால் - அது தமிழனின் பொறுப்புணர்வின் வெற்றி! அனைத்து நன்கொடைக்கும் முறையான ரசீது உண்டு.
ஒரு பேரறிஞனை - அவர் வாழும் காலத்தில் பாராட்ட பணம் தாருங்கள்!நன்கொடையை வே. ஆனைமுத்து, பா. இராமமூர்த்தி என்னும் இணை பெயரில் காசோலை வரைவோலைகளாக அனுப்ப வேண்டிய முகவரி:சங்கமித்ரா, பெரியார் தமிழ்ப்பேரவை, ப.எண்.1/429, தென்பெரும் நெடுஞ்சாலை, வண்டலூர் வாயில், சென்னை - 600 048. பேசி : 9841359717
---சங்கமித்ரா