Saturday, July 26, 2008

மறக்க முடியுமா - நக்கீரன், பாகம் -2



நக்கீரன் மே-10, 2008 தேதியிட்ட இதழில் மறக்க முடியுமா தொடரில் வெளிவந்த அய்யாவின் கட்டுரை.

நன்றி : நக்கீரன்

மறக்க முடியுமா - நக்கீரன், பாகம்-1



நக்கீரன் மே-07, 2008 தேதியிட்ட இதழில் "மறக்க முடியுமா" என்ற தொடரில் வெளிவந்த அய்யாவின் கட்டுரை முதல் பாகம்.

நன்றி: நக்கீரன்

Saturday, July 5, 2008

பெரியார் ஒளி - விடுதலைச் சிறுத்தைகள் விருது

கடந்த ஏப்ரல்-14, மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் அய்யா ஆனைமுத்து அவர்களுக்கு "பெரியார் ஒளி" என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. நமது தமிழ்மண், மே 2008 நாளிதழில் வெளிவந்த செய்தியை (ஆனைமுத்து அய்யாவின் உரையுடன்) இங்கே தந்துள்ளேன்.


நன்றி: நமது தமிழ்மண்

Saturday, June 28, 2008

குங்குமம் நேர்காணல்


எப்போதோ வந்த செவ்வி, கூடுதல் விபரங்கள் இல்லை. தொகுப்பில் இருந்ததை எடுத்து வெளியிட்டுள்ளேன்.

Wednesday, June 18, 2008

வாழும் பெரியார்

பார்ப்பனராய் அல்லாதார் நாமென்னும் நல்லுணர்வைப்
படிக்கின்ற பருவத்தே ஆசானாம் கணபதியும்
போர்க்குணமே மிக்கவராம் வே.ஆனைமுத்துவிற்குப்
புரிகின்ற படிநன்கு புகட்டிவிட்டார்; "பாலதனை
வார்க்கின்ற வர்காலைப் பதம்பார்த்து வருணமெனும்
வஞ்சகத்துப் புற்றினிலே வாழ்ந்துவரும் பாம்புகளே
பார்ப்பனர்கள்" என்பதனைப் பாருக்கு உணர்த்திட்டார்
பகுத்தறிவுப் பகலவனாம் பார்போற்றும் நம்பெரியார்!

எடுத்ததொரு கொள்கையினில் எந்நாளும் பிடிப்போடு
இருப்பதெனும் உறுதியுடன் இருப்பவராம் ஆனைமுத்து
அடுத்ததொரு முடிவெடுத்தார் அருந்தலைவர் பெரியாரின்
அனல்பறக்கும் கழகத்தில் அவர்தன்னை இணைத்திட்டார்!
அடுத்திருந்து பெரியாரின் அறிவுரையை அவர்பேச்சை
அவரெழுத்தை அணுஅணுவாய் உள்வாங்கி உரம்பெற்றார்
கெடுக்கின்ற அரசியலின் கொடுஞ்சட்டந் தன்னைக்கொளுத்திக்,
கொடுத்ததொரு பரிசாகச் சிறைவாழ்வும் அவர்ஏற்றார்!

எப்போதும் களம் நிற்கும் வீரருக்குப் பின்னாலே
தப்பாமல் அவர்துணைவி நின்றிடுவார் பெரும்பாலும்
ஒப்பாக இவருக்கும் வாய்த்தனளோர் நற்றுணைவி
செப்பிடலாம் அம்மையினை மார்க்சுக்கு ஜென்னியென
தப்பின்றி எழுவர்க்குச் சுசீலாவும் தாயானார்
தடையின்றித் தம்கணவர் கொள்கைக்குத் துணையானார்
முப்பொழுதும் அப்பொழுதும் இப்பொழுதும் அவருக்கு
முதன்மனைவி அவர்கொள்கை; அடுத்ததுதான் தானானார்!

யானையதைப் பார்த்ததொரு குருடரைப்போல் பலரிங்கு
பெரியாரைப் பார்க்கின்றார் பலவாறு பகர்கின்றார்
ஆனைமுத்து ஒருவர்தான் அவர்நெறியை அவர்கருத்தைச்
சரியாகச் சொல்கின்றார் சரியாகச் செய்கின்றார்!
தேன்மட்டும் உறிஞ்சுதற்குத் தெரியாத வண்டனையோர்
தேவையின்றி மலரின்மேல் தினந்தினமோர் பழிதெளிப்பார்
வான்முட்டும் அளவிற்கு வழங்கிவைத்த கருத்தெல்லாம்
"ஈ.வெ.இரா. சிந்தனையாய்" அவரன்றோ தொகுத்தளித்தார்!

நாடெங்கும் மக்களுக்குக் கல்வியினில் வேலைதனில்
நல்லதொரு இடம் கிடைக்க நாளெல்லாம் பாடுபட்டார்
ஓடிவட நாடெல்லாம் ஒதுக்கீட்டுத் தோச்சுடரை
ஓயாமல் ஏற்றிட்டார் ஓய்வின்றித் தானுழைத்தார்
வாடிவிடா மல்பெரியார் கொள்கைகளைக் காப்பதற்கு
வளமான "சிந்தனையாளன்" ஏடு நடத்துகிறார்
நாடியவர் கருத்தறிந்து நாமெல்லாம் தோள்கொடுத்தால்
தேடிவரும் தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சியன்றோ!

பெரியாரின் பெயர்சொல்லிப் பிழைக்கின்றார் பலரிங்கு
பெரியாரின் பெயர்சொல்லிப் பிழைக்கின்றார் திராவிடத்தார்
பெரியாரின் பெயர்சொல்வார் பொதுவுடைமைத் தோழருமே
பெரியாரின் பெயர்சொல்லிப் பேசாதார் எவருமில்லை
பெரியாரை விலைபேசி விற்காதார் எவருமில்லை
பெரியாரியல் வெற்றிக்கு எவரிங்குத் தோள்கொடுப்பார்?
ஆனைமுத்து! அவரேதான் வாழுகின்ற நம் பெரியார்!
---பாவலர் வையவன்
(நன்றி சிந்தனையாளன் பொங்கல் சிறப்பு மலர் -2006)

ஆனைமுத்து நூல் நிதி ஏன்?

தோழர்களே!
ஆனைமுத்து ஜூன் 21இல் 81-அய்த் தாண்டுகிறார். 60 ஆண்டுகள் - தமிழ் - தமிழன் - தமிழ்நாடு சிக்கல்களுக்கு தீர்வு காண உழைத்திருக்கிறார். களப்பணி - பிரச்சாரம் - எழுதிக் குவித்தது - எல்லாம் காற்றில் கலந்த பேரோசையாக! இவர் எழுத்தில் நூலானது - 1980இல் - ஒரு சிறு பகுதி மட்டுமே!பெரியாருக்கும் ஆலோசகர்: பலருக்குத் தெரியாது - தோழர் ஆனைமுத்து பெரியாருக்கும் ஆலோசகர் என்பது. இலக்கிய - சட்ட - வரலாற்றுச் செய்திகளில் நாள் தேதி இடம் - உட்பட நினைவில் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் இவர். புத்தமதத்துக்குப் போனாலும் - நாத்திகன் ஆனாலும் - இந்து இல்லை என்று எழுதிக் கொடுத்தாலும் நீங்கள் இந்துதான் - என்ற செய்தியை ஆதாரங்களுடன் - நீதிமன்ற தீர்ப்பு சான்றுகளுடன் பெரியார் முன் வைத்தார் ஆனைமுத்து. "தப்பு பண்ணிட்டேன்” என்று பெரியார் தலையில் அடித்துக் கொண்டார். அதுமுதல் ஆனைமுத்தை முதன்மை பிரச்சாரகர் ஆக்கினார், பெரியார்.இலக்கியச் சுரங்கம்: தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் - ஆனைமுத்து. எந்த இலக்கியத்தில் - எந்தச்சொல் - எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்தவர். திருக்குறளில் பெரிய ஆராய்ச்சியே செய்து - அது ஒரு நீதி நூல் மட்டுமே - மனுநீதியிலும், அர்த்த சாஸ்திரத்திலும் இருக்கும் ஈவிரக்கமற்ற அரசக் கொடுங்கோன்மைக் கருத்துக்கள் - திருக்குறளில் இல்லை என்றவர் ஆனைமுத்து. மனு - கவுடில்யர்படி ஆண்டவர் வென்றார்கள். திருக்குறள்படி வாழ்ந்தவர்கள் - வீழ்ந்தார்கள். ஆட்சிக்கு வன்முறை அவசியம். இராணுவம் அவசியம். புத்தமத வீழ்ச்சிக்கு முதல் காரணம் - அசோகன் ராணுவத்தைக் கலைத்ததுதான் - என்பன போன்ற ஆனைமுத்து கருத்துகள் "அட்சரம் லட்சம்” பெறும்!குடும்ப நிலைமை / பொருளியல்: மக்களுக்காகப் பாடுபடும் - தோழர் ஆனைமுத்துவின் பொருளியல் நிலை என்ன? குடும்ப நிலை என்ன? எங்கேயும் யாரிடமும் இவர் பேசாத செய்திகள் இவை. இருந்த 8 ஏக்கர் நிலத்தை - வந்த அந்நாள் (1950) ரூ.8000-10,000 பணத்தை - இயக்கம் வளர்த்ததிலும் பத்திரிகை நடத்தியதிலும் "பாழ் பண்ணியவர்” ஆனைமுத்து. ஒருபிடி நிலக்கடலையும் - இரண்டு பேரீச்சம்பழமும் இரவு உணவாகச் சாப்பிட்டு புத்தகம் - கட்சி அறிக்கை கட்டுகள் - இந்தக் கையில் 20 கிலோ - அந்தக் கையில் 20 கிலோவுடன் டெல்லி - மும்பை ரயில் மேம்பாலங்களில் இவர் ஏறும் காட்சி - துயரத்திலும் துயரம். அது அல்ல நம் கவலை! ஆனைமுத்துவின் சிந்தனை - எழுத்து - தன் வரலாறு - நூலாகாதது! பல ஆண்டுகளாக இவர் எழுதும் சிந்தனையாளன் Periyar Era - தலையங்கம் அனைத்தும் நூலாகத் தகுந்த - தமிழ்மக்கள் மேம்பாட்டு மாமருந்து. நூலாகவில்லை. அது நமக்கு இழப்பில்லையா? அதுவே நம் கவலை!பெரியார் தமிழ்ப் பேரவை: எத்தனையோ பேரறிஞர்களின் சிந்தனைகள் - எழுத்துக்கள் - காற்றில் கலந்து மண்ணோடு மண்ணாகின - தமிழனின் பொறுப்பற்ற புறக்கணிப்பால்! ஆக்ஸ்போர்ட் படிப்பாளி - கம்யூனிசத் தந்தை - KTK தங்கமணியின் சிந்தனைகள் - தன் வரலாறு நூலானதா? தமிழை - புது பீடத்தில் ஏற்றிய பாவாணருக்குத் தன்வரலாறு இருக்கிறதா? சுர்ஜித் - நல்லகண்ணு - வரதராசன் என்று கம்யூனிசக் கனவில் தம் வாழ்வை அழித்த பேரறிஞர் - யாருக்கும் அவர் தம் சிந்தனைகள் நூலாக நாம் வழி செய்யவில்லையே! அதனால் பெரியார் தமிழ்ப் பேரவை களமிறங்கியிருக்கிறது - மக்களிடம் பணம் திரட்டி அறிஞர்களின் சிந்தனைகளை நூலாக்க! இதில் முதல் முயற்சி - உடன் இருப்பு - அருகாமை கருதி தோழர் ஆனைமுத்துவுக்கு. இந்த எம்பணி - எம் தொடர் திட்டத்தில் முதல்படி தான்!கொடுங்கள் - கொடுங்கள் தோழர்களே! அள்ளிக் கொடுங்கள் - கொட்டிக் கொடுங்கள், ஒரு லட்சம் என்பது - இரண்டு லட்சமானால் - அது தமிழனின் பொறுப்புணர்வின் வெற்றி! அனைத்து நன்கொடைக்கும் முறையான ரசீது உண்டு.
ஒரு பேரறிஞனை - அவர் வாழும் காலத்தில் பாராட்ட பணம் தாருங்கள்!நன்கொடையை வே. ஆனைமுத்து, பா. இராமமூர்த்தி என்னும் இணை பெயரில் காசோலை வரைவோலைகளாக அனுப்ப வேண்டிய முகவரி:சங்கமித்ரா, பெரியார் தமிழ்ப்பேரவை, ப.எண்.1/429, தென்பெரும் நெடுஞ்சாலை, வண்டலூர் வாயில், சென்னை - 600 048. பேசி : 9841359717
---சங்கமித்ரா

Friday, May 30, 2008

வாழும் பெரியாரின் வாழ்க்கைப் பயணம்

பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் முருக்கன்குடி எனும் சிற்றூரில் வேம்பாயி - பச்சை அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 21.06.1925 இல் வே.ஆனைமுத்து பிறந்தார்.

1940 இல் வீரானந்தபுரம் ந.கணபதி ஆசிரியரின் வழிகாட்டுதலில் பகுத்தறிவு கொள்கைகளை ஏற்றார். 1944 இல் வேலூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டப் பிறகு சுயமரியாதை கொள்கைகளை ஏற்று, இன்று வரை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதோடு, தனது எழுத்தின் மூலமும், பல்வேறு பணிகளின் மூலமும் தொடர்ந்து வளர்த்து வருகிறார்.

திருமணம் :
22.08.1954 அன்று கடலூர் வண்ணரப்பாளையம் ஆ. சுப்ரமணிய நாயகர் - தையல்நாயகி இணையரின் மகள் சுசீலா அவர்களை மணந்தார்.


மக்கள் : எழுவர், தமிழ்ச்செல்வி, பன்னீர்ச்செல்வம், அருள்செல்வி, வெற்றி, வீரமணி, அருள்மொழி, கோவேந்தன் ஆவர்.

1948 : அண்ணாமலைப்பல்கலையில் இடைநிலைக்கல்வி. திராவிடநாடு, பல்லவநாடு, அணில், குமரன் ஆகிய இதழ்களில் கட்டுரையும் பாடல்களும் எழுதினார்.
1949 : தந்தைப்பெரியாரின் கொள்கைப்பரப்பும் பணி
1950 : கடலூர் திருக்குறளார் வீ.முனிசாமியை ஆசிரியராகக் கொண்டு, ந.கணபதியுடன் இணைந்து "குறள் மலர்" எனும் கிழமை இதழ் திருச்சியில் 1950இல் தோன்றக் காரனமாய் இருந்ததோடு, அவ்விதழின் துணௌ ஆசிரியராகவும், பொறுப்பாளராகவும் பணிபுரிந்தார்.
1952 முதல் தந்தைப்பெரியாருடன் இணைந்து தீவிர இயக்கப் பணிகள்
1957 : திருச்சியில், "குறள் முரசு" எனும் கிழமை இதழை தனது சொந்தப் பொறுப்பில் தொடங்கினார். இவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் பெரியாரால் போற்றப்பட்டு, குடியர்சு இதழிலும் வெளியிடப்பட்டது.
1957 : அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு, 18 திங்கள் கடுங்காவல் தண்டனை.
1960 - 73 : தமிழநாடு தனிப்பயிற்சிக் கல்லுரி திருச்சியில் தொடக்கம். பாவேந்தர் அச்சகம் நிறுவினார். மாநிலமெங்கும் இயக்கப் பயிற்ச்சி வகுப்புக்கள் 1970 இல் சிந்தனையாளர்கள் கழகம் தொடக்கம்
1974 : திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் "பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள்" தொகுத்தளித்தார். சிந்தனையாளர் திங்கள் இதழ் தொடக்கம்
1975 : திராவிடர் கழகத்திலிருந்து நீக்கம்
1976 : சேலம் அ.சித்தையன், சீர்காழி மா.முத்துச்சாமி, ஆ.செ.தங்கவேலு, ந.கணபதி, தக்கோலம், கா.ந.ஜலநாதன் ஆகியோருடன் இணைந்து "பெரியார் சம உரிமைக் கழகம்"
1978 : மய்ய அரசுக் கல்வியிலும், வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி குடியசு தலைவர் என்.சஞ்சீவரெட்டியிடம் நேரில் கோரிக்கை உ.பி. மாநிலம் முசாபர் நகரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டை தொடங்கி வைத்தல், இதன் வழி முதன் முறையாக பிகாரில் பிற்ப்படுத்தப்பட்டோருக்கு 20% சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
1979 : தில்லியில் பெரியார் நூற்றாண்டு விழா, இந்தியத் துணைத் தலைமையமைச்சர் பாபு ஜகஜீவன்ராம் தொங்கி வைத்தார். இவரால் தொகுக்கப்பட்ட "தந்தைப் பெரியாரின் இடஒதுக்கீடு" கருத்துக்களின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இடஒதுக்கீடு தொடர்பில் இந்தியத் தலைமையமைச்சர் மொரார்ஜி தேசாயுடன் சந்திப்பு. இடஒதுக்கிடு குறித்த விழிப்புணர்வு பரப்புரைகளை பீகார், கேரளா, கர்நாடகா, உ.பி., இராசசுதான், அசாம், மே.வங்கம் முதலிய மாநிலங்களில் நடத்தினார். தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கு 31 சதவீத விழுக்காட்டிலிருந்து 60 சதவீதமாக உயர்த்தக்கோரி முதல்வர் எம்.சி.ஆரிடம் கோரிக்கை, இதன் மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
1980 : சிந்தனையாளனில் வெளிவந்த இவரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பல நூல்களாக வெளிவந்தது. கன்சிராம் நடத்திய "பாம்செஃப்" (BAMCEF) கூட்டங்களில் தலைமை ஏற்கவும் சிறப்புரையாற்றவும் அழைக்கப்பட்டார். 1982 : இவரின் பல போராட்டங்களைத் தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, அதைத் தொடர்ந்து மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
1988 : பெரியார் சமௌரிமைக் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமக்கட்சி என பெயர் மாற்றம்.
1991 : தில்லியில் பெரியார் பிறந்தநாள் விழாக்கள், வடமாநிலங்களில் பெரியார் கொள்கை பரப்புரைகள்
1994 : ஈழத்தலைவர் ச.அ.டேவிட் ஒத்தாசையில் "பெரியார் ஈரா" என்ற ஆங்கிலத் திங்கள் இதழ் தொடக்கம்
1996 : திருக்குறள் மாநாடு, பெரியார் பற்றிய சொற்பொழிவு மற்றும் ஆய்வுக்காக மலேசியப்பயணம். வட இந்தியாவின் 30 மாவட்டங்களில் இடஒதுக்கீடு பரப்புரைகள்
2005 : மலேசியா, சிங்கப்பூர், இலங்கை பயணம்
எழுதிய நூல்கள்:
1. சிந்தனையாளர்களுக்கு சீரிய விருந்து2. தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்3. பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெர்ரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?4. விகிதாசார இடஒதுக்கீடு செய்! (தமிழ், ஆங்கிலம்)5. பெரியாரியல் - இரண்டு தொகுதிகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.





Friday, May 23, 2008

தோழர் வே.ஆனைமுத்து

அன்புத்தோழர்களே!

வாழும் பெரியார் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் சீரிய பணியை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் முகமாக இத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

நன்றி!